வெள்ளி, 19 நவம்பர், 2010

கிறிஸ்மஸ் நாடகம் 1

                          ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்   ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன்

(யோண்  விலையுயர்ந்த உடை அணிந்து வெளியில் வருகின்றான். அவனை எதிர்பார்த்து   டேவிற், கரன், கண்ணன், ......ஆகியோர்  வெளியில் நின்றனர். )

டேவிற் ...  என்னடா இவ்வளவு நேரம் செல்லுது நீ வர.   


(விலையுயர்ந்த ஜக்கற் சப்பாத்து , இவைகளைக்கண்டதும் மனதுக்குள் எழுந்த ஒரு வித பொறாமை  குணத்தை  மனதுக்குள் அடக்கியவாறே ) 

கண்ணன்.. என்ன யோண் கிறிஸ்மஸ் என்றால் புது உடுப்பு கட்டாயம் போட வேண்டுமா?

யோண் ...கொண்டாட்டங்களுக்கு புது உடுப்பு போடுவது சிறந்த நாகரீகம்  போட மக்கு ! இதெல்லாம் உனக்கெங்கே விளங்கப்போகுது? 

கரன்...... சரியடா  நீ எங்கட தமிழ் வகுப்பில் உள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் கிறிஸ்மஸ் விழாவு
க்கு  மக்டோனாஸ்சுக்கு     மதியஉணவு உண்பதற்காக  வந்து நிற்கும்படி சொல்லிவிட்டு  இங்க கதைத்து கொண்டு நின்றால்  என்ன மாதிரி


யோண்....சரி சரி  வாங்க போகலாம்.


டேவிற் .... என்னடா எவ்வளவு காசு கொண்டு வருகிறாய்?


கண்ணன் ..... ஐஸ்கீரீமும் வாங்கித்தராவிடில் உன்னை விடமாட்டோம்.


எல்லோரும்  கத்துதல்.


கண்ணன்.... இன்றைக்கு வகையாய் மாட்டிக் கொண்டாய்.

யோண்...  பறக்காதீங்கடா நிச்சயமாய் வாங்கித்தருகின்றேன்.


மக்டோனாஸ் கடைமுன் பள்ளிநண்பர்கள் ஒன்று சேர்தல்   அங்கு தற்போதுதான் இலங்கையில்இருந்து வந்த பாபுவும் அங்கே நிற்கிறான்.  நாகரீகம் இல்லாத உடை அணிந்து ஏழ்மையாக நிற்றல்.

யோண் .... உவனுக்கு யார்  அழைப்பு கொடுத்தது?

கரன்....... ஏன்  நீதானே எமது வகுப்பு மாணவர்களுக்கு எல்லாம் கொடுக்க சொன்னாய்  

யோண்.... இல்லையாடா நாகரீகம் இல்லாதவன்  இப்பதான் இலங்கையிலிருந்து  வந்துள்ளான்.
                      
கண்ணன்.  ... என்னடா  சொல்லுகிறாய்.


டேவிற்... அவனுக்கு இங்கிலீஸ்சும் தெரியாது உடுப்பும் வடிவில்லை.என்றுதானே யோசிக்கிறாய்


யோண்.... எப்படியாவது  என்னவாவது சொல்லி அவனை கடத்து. 


கரன்.... என்னடா பிரச்சனை காசு போதாதா? 


டேவிற்..... இல்லை வந்து யோண்  ............(சொல்லத்தயங்குதல்)


கரன்.........(ஆத்திரத்துடன்)  ஏனடா யோண்  நாகரீகம் நாகரீகம் என்று வாய் கிழியாமல் பேசவாய்.
                   நாகரீகம் என்பது உடையில் சாப்பாட்டில் இல்லை எது நாகரீகம் என்று உனக்கு       தெரியவில்லையே 


டேவிற்....... அதுவும் அந்நியநாட்டில் எமது இனத்தவன் . உன் வகுப்பு மாணவன் . ஏழ்மையைக்கண்டு நீவெறுப்பதா ? புதிய உடைகளை அணிவதும் ஐஸ்கீரிம்  சாப்பிடுவதும் மட்டுமே நாகரீகம் அல்ல. மற்றவர்களின் மனம் புண்படாமல் பேசுவதே உயர்ந்த நாகரீகம்.


கரன்...  ஏழ்மையை தாழ்மையை உலகுக்கு உணர்த்தவே  இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அதற்காகவே மாட்டுத்தொழுவத்தையே தன் பிறப்பிடமாகத் தெரிந்து கொண்டார். 
அவர் நினைத்திருந்தால் மன்னன்  மகனாக பிறந்திருக்கலாம்.  கைவிடப்பட்ட அல்லுற்ற ஏழைகளின் நண்பனாகவே கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். அவரின் திருநாளைக் கொண்டாடும் நீ எப்படி இப்படி நடந்து கொள்ளலாம். வெட்கமாக இல்லை. ஒவ்வொரு மனிதனும்  என் நண்பன்  ஒவ்வொருமனிதனும் என்  சகோதரன்   என்ற உணர்வு வேண்டும். 

 கண்ணன் .......வாங்கடா இவனிடம் வாங்கிச் சாப்பிடுவதே  எமக்கு நாகரீகம் இல்லை. 
               
                            எல்லோரும்  கடையைவிட்டு  வெளியேறுதல்.

யோண்.... (பாபுவின் கையைப்பிடித்து )  என்னை மன்னித்து விடு தன்னைச்சிலுவையில் அறைந்தவர்களையே மன்னித்து ஏற்றுக்கொண்ட அந்த உத்தமர் யேசுபிரானின் கொள்கையை ஏற்றுக்கொண்ட நான் இப்படி நடந்தது தவறு . எல்லோரும் என்னை மன்னித்து சாப்பிட வாருங்கடா . 


எல்லோரும் மகிழ்ச்சியாக  சாப்பிட செல்லல்.






புதன், 17 நவம்பர், 2010

கிறிஸ்மஸ் பேச்சு 2

கிறிஸ்து பிறப்பும்     மனித விடுதலையும் 

இறைமகன்  இயேசு  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப் பூவுலகில் மனிதனாகப் பிறந்த நிகழ்வே கிறிஸ்மஸ் ஆகும் .அவர் இவ்வுலகில் பிறக்கும் போது எளிமை சமாதானம் பிறர் அன்பு விடுதலை என்ற கனிகளைக்  கொண்டு வந்தார் . இவற்றை எம் வாழ்வில் கடைப்பிடிப்பதிலேயே கிறிஸ்மஸ் விழாவின் அர்த்தம் நிறைந்து கிடக்கின்றது. விழா என்றாலே எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விழாவை விரும்புகின்றர். விழா கொண்டாடுவதால் மனதிற்கு மகிழச்சியும் உற்சாகமும் கிடைக்கின்றது. கவலைகள் மறக்கப்படுகின்றன. அன்பு  ஆட்சி செய்யப்படுகின்றது  ஆனால் இந்த விழாவை க் கொண்டாடும் பொழுது கனிகளை விட்டு காய்களைத் தேடுகின்றோம். 
                                                                                                                      மேற்குலகின் விஞ்ஞான வளர்ச்சியும் மனித தேவைப்பெருக்கமும்வாழ்க்கைச் சூழ்நிலையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகின்றது. நாம் அடைக்கலம் புகுந்துள்ள மேலை நாடெங்கும் ஐப்பசி மாதத் தொடக்கத்திலேயே கிறிஸ்மஸ் பொருட்கள் கடைகளை நிரப்பி விடும். ஐந்து வயதுச்சிறுவன் கடைப்பொருட்களை கவனித்து விட்டு தாயிடம்  அம்மா கிறிஸ்மஸ் வந்து விட்டது வாருங்கள் கிறிஸ்மஸ் குடில் வைக்கலாம்   என அடம்பிடிக்கின்றான்.
                                                                                                                                 காலத்தோடு ஒத்து போகின்ற இந்த வளர்ச்சி தேவைதான் இத்தகைய தேவைகளோடு வாழவேண்டிய ஒரு சூழ்நிலைக்கு மனிதன் ஆளாவதும் உண்மைதான் ஆனால் இத் தேவைகள் அவனுடைய உள்ளத்தை ஆக்கிரமித்து விடக்கூடாது . அதிலும் புலம் பெயர்ந்து வாழும் நாம் இதற்கு அடிமைப்பட்டால் கிறிஸ்து பிறப்பின் அர்த்தத்தையே இழந்து நிற்போம். 
                                                                                                 கிறிஸ்து பிறப்பு என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது அவர் பிறந்த எளிமைக்கோலம்தான். மாட மாளிகை எல்லாம் அவர் வரவுக்காக காத்திருக்க அவரோ எளி குடிலில் பிறந்தார். 
                             எந்த எளியனும் என்னைச் சந்திக்க 
                             நான் குழந்தையாய் பிறந்தேன் 
                             நீ குழந்தைபோல் உள்ளம் கொண்டிருக்க 
                             நான் மீட்பராக வந்தேன் .நீ மீட்பு பெற
                                                                                                              எங்கோ கேட்ட பாடல் வரிகள் . அர்த்தம் நிறைந்த வரிகள்.
                                      மேலைநாட்டவர்கள் எல்லாம் கிறிஸ்மஸ் என்றவுடன் அன்பளிப்பு பண்டங்கள் என அவற்றிலேயே காலத்தை கரைத்து விடுவார்கள் .பெற்ற தாய் தந்தையரை வருடம் முழுவதும் சென்று பார்க்காதவர்கள் . கிறிஸ்மஸ் காலத்தில் ஒரு பூங்கொத்துடனும் ஒரு பொட்டல இனிப்புடனும் சென்று பாசத்தை பகிர்ந்து திரும்புவார்கள். இது அவர்களின் நிலை . இன்று நாமும் அவர்களின் சூழலில் வாழ்வதாலோ என்னவோ  என்ன பரிசு வாங்குவது என்ன சமைப்பது யாரை அழைப்பது என்ற சில்லறை விடயங்களிலேயே மூழ்கிப்போகின்றோம். 
மற்ற மனிதனின் அடிப்படைத்தேவையை விட என்னுடைய ஆடம்பரத்தேவை உயர்ந்தது. என்றே வாழ்கின்றோம். நமது நாட்டை பார்த்தே  புரிந்து கொள்ளலாம்.  யுத்தத்தின்கோரப்பிடியில் அகப்பட்ட மக்கள் மரங்களின்  கீழும் தெருவோரங்களிலும்  வாழ்வதுடன்  ஆடை இன்றி  சத்தான உணவு இன்றி  துன்பத்தில் துடிக்கின்றார்கள். ஆனால் நாமோ அவர்களின் நிலையை எண்ணாது களியாட்டங்களில் நேரத்தையும் பணத்தையும் கரியாக்குகின்றோம்.  பொன் பொருள் புகழ் தேடும் உலகில் மனிதனைத்தேடியவர் யேசு எனவே ஒவ்வொரு மனிதனும் மனிதப் பண்புகளுக்கு மதிப்புக் கொடுத்து வாழ்வதிலேயே கிறிஸ்மஸ் விழாவின் அர்த்தம் அடங்கியுள்ளது.

 


 

                                                  
 

                                                                                                                                

செவ்வாய், 16 நவம்பர், 2010

கிறிஸ்மஸ் விழா 2010 பேச்சு

கிறிஸ்மஸ் விழா ஒரு மகிழ்ச்சி விழா இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் யூதேயா நாட்டின் பெத்தேலேகம் என்ற ஊரில் மாட்டுத்தொழுவத்தில்  இறைமகன் மனு உரு எடுத்து கன்னிமரியின் வயிற்றில் அவதரித்த நாள் இறைவன் தனது மகனாகிய கிறிஸ்துவை மீட்பராக உலகுக்கு அளித்த பெரு விழா . இறைவன் மனிதனோடு பாவம் தவிர அனைத்திலும் பங்கெடுத்து உரிமை வழங்கியநாள். இதைத்தான் ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் குதூகலத்துடன் கிறிஸ்மஸ் விழா எனக் கொண்டாடுகின்றனர். 
                                                            மண்ணின் மன்னாகப் பிறக்காமல் மனித மனங்களை வென்றிடும் அன்பு மன்னாகப் பிறந்தார். 2000 ஆண்டுகள் கடந்த பின்னும் நவீன ஆயுத ஒலிகள் மத்தியிலும் யேசு பாலனின் வருகை உலகமெல்லாம் கொண்டாடப்படுகிறது.ஆகவே அன்புக்கு விழா எடுப்பதுதானே கிறிஸ்மஸ் . அன்பை பிறருக்கு பகிர்ந்தளிப்பதுதானே கிறிஸ்மஸ். எங்கெல்லாம் அன்பு இருக்கின்றதோ அங்கெல்லாம் கிறிஸ்மஸ். எங்கெல்லாம் அன்புறவு உருவாகின்றதோ அங்கெல்லாம் கிறிஸ்து பிறக்கின்றார்.

கிறிஸ்மஸ் விழா 2010 கவிதை 2

தங்கநிலவு
மார்கழி மாத முன் பனிக் காலம் 
கொட்டும் பனிப்பாளம் 
வெடவெடுக்கும் 
விடியற்கால சாமம் 

மாட்டைக்குடிலில் 
மரியாள் மடியில் 
இடையர்கள்  நடுவில் 
மா மன்னவர் மழலை வடிவில் 

வரிசையாய் 
வானவர் மேய்ப்பர் மூவரசர் 
வந்தவர் பணிந்தனர்
வாய் விட்டு வியந்தனர் 
வைக்கோல் பட்டறையில் 
வைர அட்டிகையா  
குப்பை மேட்டில்
குத்து விளக்கா
தரையிலா தவழ வேண்டும் 
தங்க நிலவு 


ஓ!  தன்னை தாழ்த்துகிறவன் 
       உயர்த்தப்படுவான் போலும்.

 

கிறிஸ்மஸ் விழா 2010 கவிதை

வீட்டில் எப்போது

காலம் மார்கழி 
நேரம் நடுச்சாமம்
வண்ணமகள் என் சின்னமகள்
ஓடி வந்தாள் 
அம்மா 
கன்னியின் மடியில் 
புன்னகை மன்னன் 
பிறந்து விட்டார் 
காட்டினர்  ரீ.வி.யில்
வாடியது முகம்
ஆண்டாண்டு காலம் 
மாடடைக் குடில்தான் 
மாபரன் யேசுவின் பிறப்பிடமோ
எப்போது எங்கள் வீட்டில் 
தொடுத்தாள் வினா ஒன்று 


அநீதிக்காக  குரல் கொடுக்கும் போது 
நீதியை நிலை நாட்டும்போது
சாதி பேதங்கள் மறையும் போது
நாதியற்றவர்கள் நலம் பெறும் போது
ஏதிலிகள் அக மகிழும் போது
பாவிகள் மனம் திருந்தும் போது
பெண்மையை போற்றும் போது


பணிவிடை பெற அல்லாமல் 
பணிவிடை செய்யும் போது 
மனித மதிப்பீடுகளின்படி வாழும் போது 
நிச்சயம் எம் வீட்டில் 
சாமாதானத்தின்  தேவன் 
வந்து பிறப்பார் பகன்றேன் நான்
புரிந்தும் புரியாததுமாய் 
மெல்லச்சிரித்தாள்  என் சின்னமகள்.